பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நார்மண்டி தரையிறக்கத்தின் 80-வது ஆண்டு நிறைவை 'டி-டே' வீரர்களுடன் கொண்டாடினர்.
இங்கிலாந்து அரசர், அரசி மற்றும் வேல்ஸ் இளவரசர் ஆகியோர் ஆண்டு நிறைவைக்குறிக்க புதன்கிழமை போர்ட்ஸ்மவுத்தில் நேற்று (ஜூன் 6-ஆம் தேதி) நடந்த விழாவில் கலந்துகொண்டனர்.
டி-டே (D Day) என்றால் என்ன? இது ஏன் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது?
நரேந்திர மோதிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காதது பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
சிறையில் இருந்தபடி முன்னாள் முதல்வரை தோற்கடித்தவர் - 3 வெற்றிகரமான சுயேச்சைகளின் மாறுபட்ட கதை
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
டி-டே என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் துருப்புக்கள் 1944-ஆம் ஆண்டு 4 ஜூன் 6-ஆம் தேதி, வடக்கு பிரான்ஸின் கடற்கரையில் ஜெர்மன் படைகளைத் தாக்கின.
டி-டே என்பது இதுவரையில் நடந்திராத மிகப்பெரிய கடல்வழி ராணுவ நடவடிக்கையாகும். நாஜி ஆக்கிரமிப்பின் கிழ் இருந்த வடமேற்கு ஐரோப்பாவை விடுவிப்பதற்கான படையெடுப்பின் துவக்கத்தை அது குறிக்கிறது.
இதன்போது பிரான்சின் நார்மண்டியில் உள்ள ஐந்து வெவ்வேறு கடற்கரைகளில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் ஒரே நேரத்தில் தரையிறங்கின.
ஒரு வருடத்திற்கும் மேலாகத் தீட்டப்பட்ட இதற்கான திட்டத்தில், டி-டேயாக ஜூன் 5-ஆம் தேதி முடிவுசெய்யப்பட்டிருந்தது. அமைதியான கடல், முழு நிலவு மற்றும் பொழுது விடியும்போது குறைந்த நீர் ஆகிய மூன்று சாதகமான நிலைமைகள் அந்தத் தேதியில் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இருப்பினும் திடீர் புயல் காரணமாக 24 மணிநேரம் தாமதமாக டி- டே நடவடிக்கைகள் துவங்கின.
"D" என்பது "Day" என்பதைக் குறிக்கிறது. டி-டே என்பது ஒரு நடவடிக்கையின் முதல் நாளைக் குறிக்கும் ராணுவச் சொல்.
இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு தடை - என்ன காரணம்?
துபாயில் ரூ.10 லட்சம் கோடியில் 300 செயற்கைத் தீவுகளை உருவாக்கும் கனவுத் திட்டம் - முழு பார்வை
பட மூலாதாரம், Getty Images
'டி-டே' அன்று என்ன நடந்தது?
வான்வழித் துருப்புக்கள் அதிகாலையில் எதிரிகளின் எல்லையில் தரையிறங்கின. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான கப்பல்கள் முக்கிய கடல்வழித் தாக்குதலுக்காக நார்மண்டி கடற்கரையில் கூடின.
படையெடுப்பை எதிர்பார்த்திருந்தாலும் கூட நாஜி ஜெர்மனியின் ராணுவத் தலைவர்கள் இந்த ஆரம்ப தாக்குதல்களை 'ஒரு திசை திருப்பும் தந்திரம்’ என்றே கருதினர்.
தாக்குதலுக்கு முந்தைய வாரங்களில் அரங்கேறிய ஏமாற்று திட்டம், தொலைவில் உள்ள கடற்கரைப்பகுதியில் முக்கியப் படையெடுப்பு இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்க வழிவகுத்தது.
'கோல்ட்’ என்ற குறியீட்டுப் பெயரில் அறியப்பட்ட இந்தக் கடற்கரையில் பிரிட்டிஷ் துருப்புக்கள் எதிர்ப்பின்றி காலூன்ற இது உதவியது.
கனேடியப் படைகள் மற்றொரு கடற்கரையான 'ஜூனோ’-வில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. மற்றொரு ஆங்கிலேயப்படை 'ஸ்வோர்ட்’ கடற்கரையில் இறங்கியது.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கப் படையால், மேற்குக் கடற்கரையான 'உட்டாவில்’, பெரிய உயிரிழப்புகள் இல்லாமல் தரையிறங்க முடிந்தது.
ஆனால் அருகிலுள்ள ஒமாஹா கடற்கரையில் அமெரிக்கப் படை கடுமையான இழப்புகளைச் சந்தித்தது. ஜெர்மன் பாதுகாப்பு படை மீது கடற்படை நடத்திய சரமாரியான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் பலனளிக்கவில்லை. அமெரிக்கர்கள் ஜெர்மன் துருப்புகளின் ஒரு சிறப்புப் பிரிவை எதிர்த்துச் சண்டையிட வேண்டி வந்தது.
நள்ளிரவுக்குப் பிறகு, மூன்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வான்வழிப் பிரிவுகள், 23,000-க்கும் அதிகமான வீரர்கள், கடற்கரைப் பகுதிகளை கைபற்றப் புறப்பட்டனர். எண்ணற்ற கடற்படைக் கப்பல்கள் மற்றும் தரையிறங்க உதவும் படகுகள், 'பிக்காடில்லி சர்க்கஸ்' என்று பெயரிடப்பட்ட இடத்தில் கூடின.
காலை 6:30 மணி முதல் கடற்படை குண்டுவீச்சின் மறைவின் கீழ் ஐந்து தாக்குதல் பிரிவுகள் கடற்கரைகளில் தரையிறங்கின.
நாள் முழுவதும் துருப்புக்கள் கடற்கரைகளில் இறங்கிய வண்ணம் இருந்தன. நள்ளிரவுக்குள் நேச நாடுகளின் படைகள் அந்தக் கடற்கரைப் பகுதிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன. பின்னர் கோல்ட், ஜூனோ, ஸ்வோர்ட் மற்றும் உட்டா ஆகிய கடற்கரைகளில் இருந்து உள்பகுதி நோக்கிச் செல்லத் தொடங்கின.
கிரிக்கெட்டில் அமெரிக்காவின் பிரவேசம் இந்தியாவின் செல்வாக்கிற்கு சவாலாக மாறுமா?
ஐ.டி. வேலை என்று ஆசை காட்டி வெளிநாடு அழைத்துச் சென்று சித்திரவதை செய்யும் கும்பல் - முழு பின்னணி
டி-டேயில் எத்தனை துருப்புக்கள் பங்கேற்றன, எத்தனை பேர் இறந்தனர்?
பட மூலாதாரம், Getty Images
7,000 கப்பல்கள் மற்றும் தரையிறங்க உதவும் படகுகள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. மொத்தம் 1,56,000 வீரர்கள் மற்றும் 10,000 வாகனங்கள், நார்மண்டியில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கடற்கரைகளைச் சென்றடைந்தன.
ஜெர்மனியர்களிடம் இருந்ததைக் காட்டிலும் வலிமையான விமானப்படையும், கடற்படையும் நேச நாட்டுப் படைகளிடம் இருந்தன. இவற்றின் ஆதரவு இல்லாமல் இந்தத் தரையிறக்கம் சாத்தியமாகியிருக்காது.
ஆனால் டி-டே நாளில் மட்டும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையின் 4,400 துருப்புக்கள் இறந்தனர். சுமார் 9,000 பேர் காயமடைந்தனர் அல்லது காணாமல் போயினர்.
அன்றைய நாளில் மொத்த ஜெர்மன் உயிரிழப்புகள் எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 4,000 முதல் 9,000 வீரர்கள் இறந்திருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நேச நாட்டுப் படைகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் விளைவாக ஆயிரக்கணக்கான பிரெஞ்சு குடிமக்களும் கொல்லப்பட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
'டி-டே'க்குப் பிறகு என்ன நடந்தது?
டி-டேயின் முடிவில் நேச நாட்டுப் படைகள் பிரான்ஸில் காலூன்றினாலும் கூட அவர்கள் மீண்டும் கடலை நோக்கித் தள்ளப்படும் அபாயம் இருந்தது.
ஜெர்மனியர்கள் தங்கள் படைகளை வலுப்படுத்துவதை விட வேகமாக அவர்கள் தங்கள் படைகளை கட்டியெழுப்ப வேண்டியிருந்தது.
நார்மண்டியின் குறுகிய பாதைகள் மற்றும் உறுதியாக பாதுகாக்கப்பட்ட நகரங்கள் வழியாக அவர்களது முன்னேற்றம் மெதுவாக இருந்தது.
தங்கள் எதிரியை விட அதிக எண்ணிக்கையில் இருந்த நேச நாட்டுப்படைகள், வலுவான விமானப்படையின் ஆதரவுடன் எதிர்ப்பைச் சமாளிக்க முடிந்தது. ஆயினும் இந்தப் படைகள் பெரிய அளவிலான இழப்புகளையும் சந்தித்தன.
1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் அவர்கள் பாரிஸை விடுவித்தனர். ஆயினும் பிரான்ஸை சென்றடைந்த 20 லட்சம் நேச நாட்டு துருப்புக்களில் சுமார் 10% பேர் இறந்தனர், காயமடைந்தனர் அல்லது காணாமல் போயினர்.
வாசனை திரவிய உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர்கள் - ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பிபிசி
ஆண்கள் வேண்டாம்! 'செயற்கை நுண்ணறிவு' காதலனுடன் சீன பெண்கள் டேட்டிங் - என்ன காரணம்?
பட மூலாதாரம், Getty Images
பட மூலாதாரம், PA Media
எத்தனை டி-டே வீரர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்?
எத்தனை டி-டே வீரர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் அனைவருமே இப்போது தங்கள் 90 வயது முதல் 100 வயதுகளில் இருப்பார்கள்.
100-க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் டி-டே வீரர்கள் உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.
23 பேர் நார்மண்டியில் நடக்கும் நினைவேந்தல்களில் பங்கேற்றனர். மேலும் 21 பேர் ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள நேஷனல் மெமோரியல் ஆர்போரேட்டத்தில் நடந்த நினைவு நிகழ்வில் கலந்து கொண்டனர் என்று பிபிசியின் அரச மாளிகை செய்தியாளர் சீன் கோக்லேன் கூறுகிறார்.
இரண்டு டஜன் அமெரிக்க வீரர்கள் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொண்டனர் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டில் உள்ள அமெரிக்க கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களை மேற்பார்வையிடும் அமெரிக்க போர் நினைவுச்சின்னங்கள் ஆணையம் தெரிவிக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)